சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கான காரணம் என்ன? : வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

"ஷி யான் 6" என்ற சீன கடல்சார் ஆராய்ச்சிக் சப்பலானது இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கப்பலுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரமே கொழும்பு துறைமுகத்திற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பலானது இந்து சமுத்திரத்தில் ஆய்வுத் திட்டமொன்றுக்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நாரா இன்ஸ்டிடியூட் அளித்த தகவலின்படி, இந்த ஆய்வு கப்பலானது , நாரா நிறுவனத்துடன் இணைந்து சுமார் ஒரு வார காலம் இந்தியப் பெருங்கடலின் நீர்நிலைகள் குறித்து சிறப்பு ஆய்வு நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியானது இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுப் பணிகள் 2010ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், இவ்வருடம் மீண்டும் இந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்பி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள சீனா தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் குறித்த கப்பல் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் நாரா நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.



