அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் : மட்டக்களப்பில் கத்தி கூச்சலிட்ட தேரரால் பதற்றம்!

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு இன்று (25.10) மாலை சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை எச்சரிக்கும் வகையில் கடும் தொனியில் கத்தி கூச்சலிட்டதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இருயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில் அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை கொண்டு பேசினார். இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்துசெல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
குறித்த பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில் அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகரசபை ஆணையாளர் சுமனரத்ன தேரரிடம் நேற்று தெரிவித்திருந்தாகவும் எனினும் அவர் இன்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
குறித்த கட்டிட இடிபாடுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடைய சகாக்களும் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இங்கு அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் கத்தி கூச்சலிடுகையில், “பொலிஸார் இந்த வீதியை மூடினார்கள், பிரச்சினை ஏற்படுத்தினார்கள், இறுதியில் எமக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்தனர். இவர்களின் இந்த செயற்பாடு சரியானதா. இவ்வாறு செய்ய வேண்டாம். நாம் உதவியற்றவர்கள்.
இனம் என்ற ரீதியில், இங்கு இடம்பெறும் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
நாட்டில் இனவாதம் இல்லை, மதவாதமும் இல்லை. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் மிகவும் அமைதியாக வாழ்கின்றனர்.
சாணக்கியன் மற்றும் இங்குள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும். அவ்வாறு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



