கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நியாயமாக இருக்க வேண்டும்: அமெரிக்க தூதுவர்

இலங்கை கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து உரையாடியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார் இது குறித்து அமெரிக்க தூதுவர் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நான் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கை சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாவது தொகுதி கடனை பெறுவதில் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக வாழ்த்துக்களை தெரிவித்தேன் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நியாயபூர்வமானதாகயிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன் - கடன் வழங்கியஅனைவரையும் சமமான விதத்தில் நடத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தினேன் எனவும் ஜூலி சங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ள அனைத்து தரப்பினரும் வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் ஸ்திரதன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்து நியாயம் வெளிப்படைதன்மை ஒருமைப்பாடு மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை மதிக்கும் ஒரு பொருளாதார சூழல் குறித்து அமெரிக்கா உறுதியுடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



