வல்லுநர்கள் வெளியேற்றம்: இலங்கையில் ஸ்தம்பிதமடையும் சுகாதார துறை!

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக் காரணமாக மூளைசாளிகள் அதிகளவில் வெளியேறிவருகின்றமை இலங்கையின் எதிர்காலத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்துமென பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வைத்தியர்களின் வெளியேற்றமானது சுகாதாரத்துறையில் பாரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த இரு வருடங்களில் மாத்திரம் 1,500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக அதிகரிக்கப்பட்டு வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு குறுகிய காலத்துக்கான தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே தரமற்ற மருந்துகளின் உபயோகத்தால் உயிரிழப்புக்கள் அடுத்தடுத்து பதிவான நிலையில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் கொண்டுவரப்பட்டது. இதேவேளை கடந்த சில நாட்களாக தேசிய வைத்தியசாலைகளில் அதிமுக்கிய மருத்துவ உபகரணங்கள் பழுதடைகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரமும் தற்போது பழுதடைந்தள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து மற்றும் என்பு முறிவு பிரிவில் இயங்கிவந்த ஒரே ஒரு டிஜிட்டல் தொழில்நுட்ப எக்ஸ்ரே இயந்திரமும் கடந்த இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளது.
இதனால் விபத்துப்பிரிவில் சிகிச்சைப்பெற வரும் நோயாளர்களுக்கான எக்ஸ்ரே பரிசோதனைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் சிகிச்சைகளை வழங்க முடியாமலுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளர்களுக்கான சி.ரி.ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படும் இயந்திரமும் கடந்த 4 மாதங்களாக செயலிழந்துள்ள நிலையில் எக்ஸ்ரே இயந்திரமும் பழுதடைந்துள்ளது.
சுகாதாரத்துறையினால் வருடாந்தம் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்க்கும் சேவை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாமல் பிற்போடப்பட்டமையே இதற்கு காரணமென அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தரம் விக்ரம தெரிவித்துள்ளார்.



