உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை மீண்டும் குறைக்குமா அரசாங்கம்? அமைச்சர்கள் கலந்துரையாடல்

மின் கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மின்கட்டணம் அதிகரிப்பு மற்றும் அதனால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும், இது தொடர்பில் மக்கள் முன்வைக்கும் ஆட்சேபனை தொடர்பிலும் அமைச்சர்கள் பலர் உண்மைகளை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சாரம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஆலயங்களில் விழாக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், இந்த நேரத்தில் ஆலயங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அல்லது மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சர்கள் பலரும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார சபை அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாட வேண்டும் எனவும் அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், மின் கட்டணம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென அமைச்சர்கள் யோசனை தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணத்தை பொதுமக்களே சுமக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இருப்பதாக கலாநிதி வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே, மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



