இலங்கை முன்னேற்ற பாதையில் உள்ளது: சர்வதேச நாணய நிதியம்

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னேற்ற பாதையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த அர்ப்பணிப்பு, இலங்கைக்கு மேலும் ஆதரவளிப்பதற்கு ஒரு காரணம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுப்ரமணியம் கிருஷ்ணமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுப்ரமணியம் கிருஷ்ணமூர்த்தி இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி பெரும்பான்மையான மறுசீரமைப்பு முன்மொழிவுகளை பூர்த்தி செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை பாராட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதன் மூலம் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் ஆதரவு குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



