இந்தியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் கப்பல் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!

இந்தியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் கடல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று(22.10) தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த கப்பல் சேவையின் மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும் என்றும் சூரிய சக்தியை கொண்டு மன்னாரை மேம்படுத்த முடியும் என்றும் கூறினார்.
புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ் குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் உள்ளதாகவும் அதன் மையதாக பூநகரி நகரை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்றுவதுடன் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடையும் போது மன்னாரும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் என்றும் கூறிய அவர். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் கூறினார்.
மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



