400 ரூபாய் மருந்தை 4000 ரூபாவிற்கு கொள்வனவு செய்த சுகாதாரத் துறை!

சுமார் 400 ரூபா பெறுமதியான சில மருந்துகள் அவசரகால கொள்வனவுகளின் கீழ் சுமார் 4,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவ பொருட்கள் மற்றும் கொள்வனவுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2019 மற்றும் 2022 க்கு இடையில், இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவை அனைத்தும் ஊழல் பரிவர்த்தனைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு பிறகான காலப்பகுதியில் இவ்வாறான அவசர கொள்ளுமுதல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த குழுத் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பிற்காலத்தில் நிராகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்த திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டும், லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சு வருடாந்தம் ஏறக்குறைய 10,000 டெண்டர்களைக் கொண்டிருப்பதாகவும், பெரும்பாலான பரிவர்த்தனைகள் ஊழல் நிறைந்தவை என்றும் குழுவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கை இந்த உபகுழுவை நியமித்த பாராளுமன்ற நிதிக்குழுவிடம் வழங்கப்பட உள்ளது.



