வளிமண்டலவியலில் ஏற்படவுள்ள மாற்றம் - திணைக்களம் வெளியிட்டுள்ள எதிர்வு கூறல்!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுப் பெறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இவ்வாறு வலுப்பெறும் தாழமுக்கமானது, இலங்கையை விட்டு வெளியேறும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதுடன், இடைக்கிடை காற்றின் வேகம் 50 முதல் 55 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறியுள்ளது.
இந்த கடல் பிராந்தியத்தில் அலை சீற்றமாகும் அதேவேளை, குறித்த பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடற்றொழிலாளர்கள் இந்த கடல் பிராந்தியத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.



