இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதி

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு ஒன்றையும் அவர் பதிவுசெய்துள்ளார். முன்னதாக இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் கீழ்தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தன்னை தாக்கியதாக டயானா கமகே குறிப்பிட்டார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தார். அமர்வு மீண்டும் ஆரம்பமானதும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து, டயானா கமகே அநாகரீகமான வார்த்தைப் பிரயோகம் செய்தமை மற்றும் மோசமான வகையில் நடந்துகொண்ட காணொளிக் காட்சிகளை காண்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இராஜாங்க அமைச்சர் கமகே தம்மைப் வார்த்தைகளால் தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
சபை அமர்வுகள் நிறைவடைந்ததையடுத்து, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டதை, பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.



