மயிலத்தமடுவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றம் - கடும் வார்த்தைகளால் பொலிஸாரை திட்டிய தேரர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி வைக்கப்பட்ட புத்தர் சிலையை இலங்கைப் பொலிஸார் அகற்றிய நிலையில் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அம்பிட்டிய சுமன ரத்ன தேரரால், மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அண்மையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்கள் சார்பில் இதற்குப் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு பொலிஸார் இந்த புத்தர் சிலையை அகற்றியிருப்பதோடு, அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
புத்தர் சிலை அகற்றப்பட்டதை அறிந்த அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
எனினும், வாகனத்திலிருந்து அவரை கீழே இறங்கவிடாது பொலிஸார் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடுமையான வார்த்தைகளால் பொலிஸாரைத் திட்டித்தீர்த்துள்ளார்.



