மன்னாரில் அமுல்படுத்துவதை காலியில் அமுல்படுத்த முடியுமா? சார்ள்ஸ் எம்பி கேள்வி

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கடலட்டை பிடிப்பதில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டை கடற்தொழில் அமைச்சினால் காலி மாவட்டத்தில் அமுல் படுத்த முடியுமா? எனக்கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன், தனக்கு வாக்கு வங்கியில்லாத மன்னார் மாவட்டத்துக்கு கட்டுப்பாடு அமுல் படுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மாவட்டங்களாக கிளிநொச்சியும் யாழ்ப்பாணமும் உள்ளதால் இவ்வாறான கட்டுப்பாட்டுக்களை அமுல்படுத்தினால் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்பதால் வாக்கு வங்கியில்லாத மன்னார் மாவட்டத்துக்கு கட்டுப்பாடு அமுல் படுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
பாராளுமனறத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்ற அனுமதி கோரும் விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
மன்னார் மாவட்டத்தில் அட்டை பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்துடன் கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர் ஒருவர் அதிகபட்சமாக 150 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் scuba diving க்கான அனுமதி பத்திரம் வைத்திருக்கும் கடற்றொழிலாளர் 250 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் என்ற புதிய சட்டம் ஒன்றை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு உங்களினால் இப்படி ஒரு சட்டத்தை போட முடியுமா? தமிழர் பகுதிகளில் மட்டும்தான் நீங்கள் நினைப்பதுபோல் சட்டங்களை அமுல்படுத்துகின்றீர்கள்.தமிழர் பகுதிகளில் உங்களை கேட்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பில்தான் இவ்வாறு செய்கின்றீர்கள்.



