முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் கடிதத்தை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை! நீதியமைச்சர்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை நீதிபதி டி.சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை.
இந்த நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என நீதி,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில் 'உயிரச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளுக்கு மனஅழுத்தம் இருப்பது வழமை ,மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன அழுத்தம் உள்ளது.பாராளுமன்றம் வரும் எமக்கும் மன அழுத்தம் உள்ளது.
சபாபீடத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன அழுத்தம் உள்ளது. அவ்வாறானால் அவரும் பதவி விலக நேரிடும்.
தனக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதிகடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும் அது எந்தவகையான , யாரால் விடுக்கப்பட்டது என்பது தொடர்பிலோ, தனக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகையான மன அழுத்தம் என்பது தொடர்பிலோ எதுவுமே குறிப்பிடவில்லை.
தனக்கு உயிரச்சுறுத்தல் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. உயிரச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க முடியும்.
பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்க முடியும். அந்த அதிகாரம் எமக்கு கூட இல்லை. ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என்றார்.



