கட்டண அதிகரிப்பு: மின்சார சபைக்கு பறந்த எழுத்து மூல அறிவித்தல்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதாக இலங்கை மின்சார சபை அனுப்பியுள்ள தகவல் தற்போதைய நிலைமைக்கு ஒத்துப்போவதில்லை எனவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இம்மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் பொது அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையானது செப்டெம்பர் மாதத்தில் நாளொன்றுக்கான மின்சாரத் தேவை 44.70 ஜிகாவட் மணிநேரமாகவும், ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சராசரி தினசரி மின்சாரத் தேவை 42.88 கிகாவட் மணிநேரமாகவும் முன்வைத்திருந்தது.
இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிலக்கரி தேவை அதிகரிப்பதை விட தேவை குறைவதையே ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும், மே 15ஆம் திகதி கிலோ ஒன்றுக்கு 68.6 ரூபாவாக இருந்த நிலக்கரியின் விலை 52.6 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கடந்த ஓகஸ்ட் மாதம் இடைக்கால மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்றை சமர்ப்பித்ததுடன், அதற்கமைய இம்மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



