ஜயவர்தனபுர டயர் துன்புறுத்தல் வழக்கில் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் டயரை எறிந்து மாணவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக பட்டியலிடப்பட்டுள்ள 16 பல்கலைக்கழகங்களில் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்த சட்டமா அதிபர் மறுத்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் 16 அரச பல்கலைக்கழகங்கள் தங்கள் பல்கலைக்கழகங்களில் நடந்த கொடுமைப்படுத்துதல் சம்பவங்கள் மற்றும் அவற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சட்டமா அதிபர் இந்தப் பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தாததால், சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காது என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி அவந்தி பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
வெளி ஆலோசகர்களை பணியமர்த்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்து அவர்கள் ஊடாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த மனு விசாரணையின் போது, பொலிஸ் மா அதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் சார்பில் மாத்திரம் சட்டமா அதிபர் ஆஜராவார் என கலாநிதி பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவரான ஹர்ஷன டி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில்,புதிய மாணவர் துன்புறுத்தல் சம்பவத்தில்இ மூத்த மாணவர்களால் அவர் மீது டயர் வீசப்பட்டு பலத்த காயமடைந்ததாகவும் அவர் இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்றும் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி, ஷவீந்திர பெர்னாண்டோ, புவனேக அலுவிஹாரே, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய பெஞ்ச் முன்னிலையில், தமது கட்சிக்காரர் பண இழப்பீடு கோரவில்லை என தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு மனுதாரர் கேட்டுக்கொள்கிறார் என்றார்.
உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம்இ நவம்பர் 10ம் திகதிக்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது.