டுபாயில் பதுங்கியிருக்கும் பாதாள உலக தலைவர்களால் பொலிஸாருக்கு அச்சுறுத்தல்

பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக தலைவர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தலைமையிலான செயற்பாடுகளை நிறுத்துமாறு இந்த பாதாள உலகத் தலைவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தென்னிலங்கையில் பாதாள உலகத்தை ஒடுக்குவதில் அளப்பரிய சேவையாற்றிய அம்பலாங்கொடை பொலிஸாரின் குற்றப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் நிலையத் தளபதி பாலேந்திரசிங்கவும் பாதாள உலகத்தின் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரு அதிகாரி.
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை பயமுறுத்தி அவர்களை செயலிழக்கச் செய்வதற்காகவே இந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாட்டின் பாதாள உலகத்தை நடத்தும் பாதாள உலக தலைவர்கள் உட்பட 50 குற்றவாளிகள் தற்போது டுபாயில் பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.
இது தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையில், தென்னிலங்கையில் பாதாள உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களைக்கூட சுட்டுக் கொல்லும் அளவுக்கு பாதாள உலகக் குண்டர்கள் பலமாகிவிட்டதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாவிடின் எதிர்காலத்தில் பாதாள உலகக் குண்டர்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் புகுந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொல்லவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். .



