இலங்கையின் எதிர்காலக் கடன் தொடர்பில் அடுத்த சில தினங்களில் IMF உடன் உடன்படிக்கை எட்டப்படும்!
இலங்கையின் எதிர்கால கடன் தவணைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த சில தினங்களில் உடன்படிக்கைக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடனாளிகளுடன் நடந்து வரும் விவாதங்களின் பின்னணியில் கூட சர்வதேச நாணய நிதியம் சாதகமாக பதிலளிக்கும் என்று Bloomberg வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரோக்கோவில் நடைபெற்ற உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையுடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு நெருக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் கிளப் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு விவாதங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு இந்த வாரத்தில் இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு வைத்துள்ளது, ஆனால் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.