டிஜிட்டல் மயமாக்கலை அனைவரும் அணுக வேண்டும்: ஜனாதிபதி

நாட்டில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கலை அணுகுவதற்கு ஒவ்வொரு நபருக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் (NITC – 2023) பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான அடிப்படை டிஜிட்டல் உட்கட்டமைப்பை தனியார் துறையினர், தனியார் முதலீடுகள் மூலம் வழங்க வேண்டும் என்றும், தனியார் துறையால் அடைய முடியாத சூழ்நிலையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“மனித வளர்ச்சியின் அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் உள்ளடக்கியுள்ளோம். இரண்டாவதாக, தேவையான மனித மூலதனத்தை எவ்வாறு வழங்குவது என்ற கேள்வியை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இன்று நீங்கள் இரண்டு அறிக்கைகளை வழங்கியுள்ளீர்கள். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன் இதைப் படித்து உங்களுடன் விவாதிக்கலாம் என்று நம்புகிறோம்.
மனித மூலதனத்துடன், எங்களிடம் உள்ள மற்ற பிரச்சினை டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குவதாகும். டிஜிட்டல் உள்கட்டமைப்பை எவ்வாறு வழங்குவது? அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அரசாங்கத்திடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களின் பின்னணியில் இதனைச் செய்ய வேண்டியுள்ளது.
எனது கருத்தும், அரசாங்கமும், தனியார் முதலீடு மூலம் அடிப்படை டிஜிட்டல் உள்கட்டமைப்பை தனியார் துறை வழங்க வேண்டும் என்பதே.
தனியார் துறையை அணுக முடியாத சந்தர்ப்பங்களில், அரசு தலையிட வேண்டும். எனவே டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொடர்பான எங்களது முழுக் கொள்கையும் இந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
பிரதான நகரங்கள் மற்றும் மேல் மாகாணம், குறிப்பாக கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.
பிறகு நாம் பிற நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
அந்த நேரத்தில், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் நிச்சயமாக நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று குறிப்பிட்டார்.



