ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தாதிருக்க கட்சியின் மத்தியக்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் தற்போதைய பதவி நிலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடாது என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
மேலும், கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளைத் தவிர ஏனைய அனைத்து பதவிகளையும் நீக்கி, தலைமைக் குழுவை நியமிப்பதற்கு முன்னதாக முன்மொழியப்பட்டது.
இருப்பினும் குறித்த யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை கட்டம் கட்டமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தற்போதைய தலைவர்கள் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருவதாகவும் எதிர்கால வேலைகளையும் தொடரக்கூடிய திறமை அவர்களுக்கு இருப்பதாகவும் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



