கடல் வளத்தை பங்கு போடவும்,எமது நிலங்களை இன்னும் ஓர் நாட்டிற்கு விற்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை!

ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது கடல் தொழில் அமைச்சராக இருந்தாலும் எமது கடல் வளத்தை பங்கு போடவும், எமது நிலங்களை இன்னும் ஓர் நாட்டிற்கு விற்பதற்கும் அனுமதிக்கப் போவதில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று புதன் கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில தினங்களுக்கு முன்னர் நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்க அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும், கடலில் மீன்கள் உள்ள இடங்களுக்கு சென்று மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு உள்ளது என்ற வார்த்தையையும் பயன்படுத்தி உள்ளார்.
பிரதமரின் கருத்துக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும், அவர்களால் மேற்கொள்ளப்படும் தொழில் முறையும் அவர்களினால் இங்கிருந்து சுரண்டிச் செல்லப்படும் கடல் வளங்களும் அதை விட கடல் சூழலை அழிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து நாங்கள் தொடர்ச்சியாக பல வருடங்களாக போராடி வருகிறோம்.
இவ்விடயங்கள் இலங்கை அரசிற்கு நன்றாக தெரியும். குறிப்பாக வட பகுதியில் இருக்கும் மீனவர்களை ஒரு கண்ணோட்டத்திலும், தென்பகுதியில் இருக்கும் தங்களுடைய மீனவ சமூகத்தை ஒரு கண்ணோட்டத்திலும் பார்த்து வருகின்றனர்.
வட பகுதி என்பது தமிழ் பேசும் மக்களை கொண்டதும்,அது தமிழர்களின் பகுதி என்ற வகையில் இன்றைய அரசாங்கம் அதனை வகுத்துள்ளது. அந்த கருத்தை தெரிவித்த பிரதமர் நீர்கொழும்பில் அல்லது சிலாபத்தில் இந்திய மீனவர்கள் தொழில் செய்வார்களாக இருந்தால் இந்த கருத்தை அவர் தெரிவிக்க முடியுமா?அதனை அந்த மக்கள் அனுமதிப்பார்களா? வளங்களை விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைத் தவிர அரசு செய்கின்ற செயல்பாடு அங்குள்ள மக்கள் வாழ்வதற்கானது இல்லை.
வடபகுதி கடல் பரப்பு இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் இது ஒன்று தான் தங்கியுள்ளது. இன்று எந்த தொழில் முறையும் இல்லாமல் கடலை மட்டும் நம்பி கிட்டத்தட்ட 2 இலட்சம் மீனவர்களும்,அதனை சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் வட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் முழுமையாக கடலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.இந்த விடையம் புரியாத பிரதமர் இந்த கடல் வளத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ளளாம்?அல்லது எவ்வாறு குத்தகைக்கு விடலாம்? என்ற பிரதமரின் கருத்து எங்களை யோசிக்க வைக்கிறது.
எது எவ்வாறு இருந்தாலும்,நாங்கள் இன்று இருந்த நிலைப்பாட்டிலே இன்றும் இருக்கின்றோம். இந்திய மீனவர்கள் எமது கடல் பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. ஜனாதிபதி,பிரதமர் அல்லது கடல் தொழில் அமைச்சராக இருக்கட்டும்.
யாராக இருந்தாலும் எமது கடல் வளத்தை பங்கு போடவும்,எமது நிலங்களை இன்னும் ஓர் நாட்டிற்கு விற்பதற்கும் அனுமதிக்கப் போவதில்லை. அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
பதவியில் இருந்து செல்கின்ற அரச உயர் மட்ட பிரதிநிதிகள் இலங்கையை காட்டிக் கொடுக்கிறார்கள். இங்குள்ள மீன் வளங்களை அள்ளிச் செல்லுங்கள் என வழி வகுக்கிறார்கள். இலங்கையில் உள்ள அல்லது வடபகுதி மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கதைப்பது இல்லை.
கடற்றொழில் அமைச்சர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை மீனவர்கள் சார்பாக வரவேற்கிறோம். அவரது கருத்து எவ்வளவு காலத்திற்கு தாக்கு பிடிக்கும் என்ற கேள்வி எழுகின்றது. பிரதமர் ஒரு கருத்தைக் கூறுகிறார்.
அதற்கு எதிராக கடற்றொழில் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்கிறார். கடற்றொழில் அமைச்சர் தனது கருத்தை அமைச்சரவை கூட்டத்தில் முன் வைப்பாரா? வட பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களால் எவ்வளவு காலம் துன்பப்படுகிறார்கள் என்று கடற்றொழில் அமைச்சருக்கு நன்கு தெரியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.



