தமிழீழ விடுதலைப் புலி உளவு பிரிவை சேர்ந்ததாக கூறப்படும் சந்தேகநபர் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலி உளவு பிரிவை சேர்ந்ததாக கூறப்படும் சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலை குற்றச்சாட்டு வழக்கில் இருந்து குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், போதிய சாட்சியங்கள் இன்மையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு செட்டிக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், குறித்த கொலை சம்பவத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வைத்திய கலாநிதி சாட்சியம் அளித்தார்.
ஆகவே இந்த கொலை குற்றச்சாட்டிற்கான போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில், கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி இளஞ்செழியன் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.



