சூத்திரதாரியை மறைக்கிறது அரசாங்கம்!

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயலென மலையக மக்கள் முன்னணி தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பில் இதுவரை பிரதான சூத்திரத்தாரி இனங்காணப்பட்டாலும் சூத்திரதாரி தொடர்பான தகவல்களை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் மறுக்கிறது என்றும் குறிப்பிட்டார். மஸ்கெலியா லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணைகளை நடத்துமாறு கோருகின்ற போதும் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசாரணைக்கு அனுமதி வழங்குவதில்லை.
தற்பொழுது எமது நாட்டை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்கிறதா அல்லது இலங்கை பொது ஜன பெரமுன ஆட்சி செய்கிறதா என்பது தெரியவில்லை.
நீதி துறையில் நீதியினை வழங்குகின்ற நீதிபதி முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விடயத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையால் நீதிபதி பதவியிலிருந்து விலகி வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலைமை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணியினை வழங்குவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதனை நாம் வரவேற்கின்றோம். பிழையான திட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
விவசாயத்துறையில் உரத்தினை இடை நிறுத்தியமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
உலகத்தில் முதல் ஜனநாயகவாதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் இன்று முறையான தேர்தல் ஒன்று இல்லை, ஜனநாயகம் இல்லை மக்களை அடக்குமுறைக்கு உள்வாங்க முயற்சிக்கிறார்” என்றார்.



