பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு பிரவேசிப்பதற்கான மேம்பாலங்கள் குறித்து ஆய்வு!

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு பிரவேசிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் குறித்த தொழில்நுட்ப மதிப்பீடு இன்று (09.10) இடம்பெறவுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளுக்கு தமது அமைப்பின் குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்படும் என அந்த அமைப்பின் கட்டமைப்பு ஆய்வு மற்றும் திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தம்மிகா கஹாஹெங்கொட தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "தற்போது ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு மேல்நிலை வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பாலங்கள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு அறிவித்துள்ளோம்.
இரு நிறுவனங்களுக்கும் எமது தொழில்நுட்ப அறிவு தேவையெனில் வழங்க முடியும் என தெரிவித்துள்ளோம். இதுவரை தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவே, இன்று எங்கள் குழுவில் ஒன்றை அனுப்பி, இதற்கு என்ன செய்ய முடியும் என்று ஒரு சோதனையை மேற்கொள்ள உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.



