மீண்டும் காலம் தாழ்த்தப்படுமா ஜனாதிபதி தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தலும் காலம் தாழ்த்தப்படுமா என்னும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சூட்சுமமான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்திவிட்டார். தேர்தல் நடத்த நிதியில்லை என கூறப்பட்டது.
இதனால், ஜனாதிபதித் தேர்தலும் காலம்தாழ்த்தப்படுமா எனும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தேர்தலை பிற்போட முடியாது. 5 வருடங்களுக்கு மேலாக ஒருவர் ஜனாதிபதியாக நீடிக்க முடியாது என அரசியலமைப்பில் உள்ளது.
எனவே, அடுத்தாண்டு ஓகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது செய்ய வேண்டுமெனில், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அத்தோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும்.
தேர்தல் நடத்த நிதியில்லை எனக் கூறும் ஜனாதிபதிக்கு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மட்டும் எப்படி நிதி கிடைக்கும்? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.



