விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை!
எதிர்வரும் பருவத்திற்கு தேவையான யூரியா உரத்தை இன்று (09.10) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பணிப்புரைகளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் 21,000 மெற்றிக் தொன் யூரியா உரம் விநியோகிக்கப்படவுள்ளதுடன், 50 கிலோ யூரியா உர மூட்டையொன்று 9,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அனைத்து விவசாய சேவை நிலையங்களிலும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப இரசாயன உரங்களை கொள்வனவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் வீதம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நெல் பயிர்ச்செய்கைக்கு யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களை வழங்குவதற்கும், காய்கறிகள் உள்ளிட்ட ஏனைய பயிர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறும் அரசாங்க உர நிறுவனங்களுக்கு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.