போஸ்டர்கள், கட்அவுட்களில் எனது புகைப்படத்தை போடாதீர்கள்: ஜனாதிபதி உத்தரவு

இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் வைக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மற்றைய அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கோச அரசியல் அல்ல மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே இன்றைய தேவை என வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்க, கட்அவுட் மற்றும் கோச அரசியல் நாட்டை பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கோஷங்கள் மற்றும் கட்அவுட் அரசியலுக்கு தான் எப்போதும் எதிரானவன் என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, புதிய அரசியல் பயணத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (08) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, நேற்று இரவு மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெரிய கட்அவுட்டை அகற்றுமாறு உரிய தரப்பினருக்கு அறிவித்தார்.



