இலங்கை அழியப் போகின்றது: பால் பண்ணையாளர்கள் நடு வீதியில்! மயிலத்தமடு விவகாரம் தொடர்பில் சுகாஷ் ஆவேசம்

மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களின் பூர்வீக மேய்ச்சல் தரைகள் மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்படவும் ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசமும் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பில் தொடர்ந்து 23 ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்
மட்டக்களப்பிற்கு மாத்திரமன்றி முழு நாட்டுக்குமே பால் விற்பனை செய்யும் பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டும்.
இந்த நாடு அழியப்போகின்றது. 990 இற்கும் அதிகமான பால்பண்ணையார்கள் குடும்பத்துடன் நடு வீதிக்கு வந்துள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமானால் உள்ளூர் உற்பத்தியை பெருக்க வேண்டும் என சர்வதேச நாணயநிதியம் கூறுகின்றது. ஆனால் இலங்கைக்கே பாலை வாரி வழங்கிய அப்பாவி தமிழ் பண்ணையாளர்கள் இன்று நடு வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் எங்கே பால் வரப் போகின்றது எங்கே பால் உற்பத்தி அதிகரிக்கப்போகின்றது.
இலங்கை அழிய போகின்றது. குறித்த பால் பண்ணையாளர்களான குடும்பங்கள் அழிய அழிய இந்த நாடும் அழியும் இந்த அரசாங்கம் சிந்திக்க வேண்டும் சர்வதேச நாணய நிதியம் சிந்திக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு இலங்கைக்கு காசுகளை வாரி வழங்குகின்றார்கள் அதைக் காசை வைத்துக் கொண்டு அப்பாவி தமிழ் மக்கள் அழிக்கப்படுகின்றார்கள் அப்பாவி தமிழ் பண்ணையாளர்கள் விரட்டப்படுகின்றார்கள்.
தமிழர்களுடைய பூர்விக காணிகளில் இன்று சிங்களவர்கள் மேய்ச்சல் செய்கின்றார்கள் இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.
தமிழர்கள் விரட்டப்படுகின்றார்கள் எனவே உடனடியாக இந்த மக்களுக்கு நீதி வழங்கபபட வேண்டும் என தெரிவித்தார்.



