சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா!

வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை (6) மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன்,சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் பிரதி பணிப்பாளர் திருமதி லா.நிருபராஸ் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து மாலை அணிவிக்கப் பட்டு வாத்திய இசையுடன் மாவட்ட செயலகம் வரை அழைத்து வரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ் தாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



