கொள்ளுப்பிட்டியில் விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்தை அடுத்து விபத்திற்கு முகங்கொடுத்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு ஒருவாரகாலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பெருந்தொன்றின் மீது மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழப்புக்களும் படுகாயங்களும் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே சாரதியும் நடத்துனரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பின்னணியில் கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்னாயக்கவின் ஆலோசனைக்கு அமைய கலந்துரையாடலொன்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
பேராதனை தாவரவியல் நிபுணர்கள் மற்றும் வனவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்றப்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதனிடையே, கொழும்பில் உள்ள மரங்களின் உறுதித்தன்மை தொடர்பில் நிபுணர் குழு ஒன்றின் ஊடாக அடுத்த வாரத்தில் ஆய்வு நடத்தப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



