கிளிநொச்சியில் சர்வதேச முதியோர், சிறுவர் தினம் அனுஷ்டிப்பு!

சர்வதேச முதியோர் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்ட நிகழ்வு இன்று(06) காலை 09.30மணி சிறப்புற இடம்பெற்றது.
குறித்த நிழ்வினை கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் அகல்ஜா செகராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
"ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றல்" என்ற தொனிப் பொருளில் முதியோர் தினமும், "எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" என்ற தொனிப் பொருளில் சிறுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
இதன்போது விருந்தினர்களை வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து, கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு மாணவி ம. ஜீவராணியின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது.
முதியோர் மற்றும் சிறுவர்களின் ஆளுமைகளை வெளிப்படுத்துகின்ற சிறுவர்களின் கவிதை மற்றும் பேச்சு, கிளிநொச்சி தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களின் கிராமிய குழு நடனம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவு முதியோர்களின் வில்லிசை, பூநகரி பிரதேச செயலக பிரிவு முதியோர்களின் கூத்து, முதியவர்களின் தனி நிகழ்வுகள் ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் முதியோர்களிற்கு நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கலைநிகழ்வு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு,கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகளுடன் அதிதிகளின் உரைகளும் சிறப்புற இடம்பெற்றன.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், சமூகசேவைஉத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர், கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பின் இயக்குநர், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், முதியோர்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.



