தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேசத்தில் இலங்கையை களங்கப்படுத்துகின்றனர்: மஹிந்த அணி ஆவேசம்

இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு போலியான தகவல்களை வழங்கி நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் செய்துவருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜேர்மன் தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில்,
ஆயுத போராட்ட காலத்தில், எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆயுத போராட்ட அமைப்புக்களால் போலியான தகவல்கள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் வடக்கில் உள்ள சில தமிழ்க் கட்சிகள் அந்த வேலையை செய்து வருகின்றன. நாட்டுப்பற்று இல்லாமல், அதிகாரத்துக்காக அலையும் தரப்புகளேவழங்கி நாட்டை இரண்டாம் தரத்துக்கு தள்ள முற்படுகின்றன.
போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, பொய்யான காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையையே வெளியிட்டு வருகின்றது.
இதனை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டி இருந்தோம். எதிரணியில் அப்போது இருந்த தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.
எனினும், ஜனாதிபதி தற்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளமையை இட்டு நாம் பெருமை அடைகின்றோம் எனவும் தெரிவித்தார்.



