மின்விசிறி தலையில் அடிபட்டு மாணவன் மரணம்!

உலக சிறுவர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலை மாணவர் ஒருவரின் தலையில் மின் விசிறி தாக்கியுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பாடசாலையில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் இராஜரத்தினம் சதுஷன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுவர் தின கொண்டாட்டம் பாடசாலையின் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் மதியம் 2 மணியளவில், வகுப்பறைக்கு வந்த மாணவன், மின்விசிறி வேலை செய்து கொண்டிருந்த போதுஇ மேசை மீது ஏறும் போது மின்விசிறி அவரது தலையில் மோதியதாக பொலிசார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த மாணவன் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கையில், மாணவன் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அதிக இரத்தப்போக்கு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாணவனின் தலை மின்விசிறியில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாகவும், பொலிசார் வருவதற்குள் வகுப்பறையைக் கழுவி மூட முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்,இப்பள்ளியில் பல இடங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறும் பெற்றோர்,பள்ளி நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டியும், கவனத்தில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.



