பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளினால் அழிப்பு!

பல பில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளினால் அழிக்கப்படுகின்றன என்றும் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் சிலவற்றிலும் இருந்து அந்த நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளுக்காக குரங்குகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வருடாந்தம் 2 மில்லியனுக்கு அதிகமான தேங்காய்கள் குரங்குகளினால் அழிக்கப்படுகின்றன. அத்துடன் பல பில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன.
இதற்கு குரங்குகள் ஏற்றுமதிக்கான சுற்றாடல் தொடர்பான அமைப்புகளின் எதிர்ப்பே காரணமாக அமைந்துள்ளன.
எவ்வாறாயினும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி இவ்வாறு வன விலங்குகளால் உணவு உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். சீன நிறுவனம் ஒன்று இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.
அந்த நாட்டில் தனியார் துறைக்குச் சொந்தமான மிருகக்காட்சி சாலைகள் ஆயிரக்கணத்தில் காணப்படுவதால் அதற்காகவே இந்த குரங்குகளை கொண்டு செல்வதற்கு அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
சீனாவில் உள்ள எமது தூதுவருடன் கலந்துரையாடி அந்தளவு மிருகக் காட்சி சாலைகள் அந்த நாட்டில் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறும் கேட்டுக் கொண்டோம். அவர்களும் அந்த நாட்டில் பாரிய அளவில் மிருக காட்சி சாலைகள் உள்ளதாகவும் அவற்றுக்கு குரங்குகள் பெருமளவு தேவைப்படுவதாகவும் எமக்கு தெரிவித்திருந்தனர்.



