இனவாதிகள் மற்றும் பௌத்த துறவிகளின் கழுகுப் பார்வைக்குள் முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிப் பகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை இராஜினாமா செய்வதென்பது தன்னைப்பொறுத்தமட்டிலே சாலச்சிறந்ததாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற சூழல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது.
இவ்வாறு குறிவைக்கப்படுகின்ற சூழலிலே நாங்கள் இந்த விடயத்தினை செய்வோமாக இருந்தால் நாடாளுமன்றத்திலே கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அற்று போவதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்திடம் உரிமையோடு கேட்கும் விடயங்கள் அனைத்தும் கேட்க முடியாத சூழல் உருவாகும். பகிஷ்கரிக்கின்ற விடயத்திலே மீள் பரிசீலனை செய்யலாம்.
ஆனால் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்ற சூழலிலே தட்டிக்கேட்கின்ற, நிறுத்துகின்ற வழிகளை கையாளுகின்ற ஒரு சூழல் சாத்தியமற்றது என்பது தன்னுடைய கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.



