கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்படும் சூழல் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
போதியளவு நிதி இல்லை எனவும் இதனால் அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்டம்பர் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 15ஆம் திகதி வரை அகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணி இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் , ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் இதே குழுவினரால் இது மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.



