முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் - கொழும்பு உயர் நீதிமன்று முன்பாக மாபெரும் போராட்டத்திற்கு தீர்மானம்!

#SriLanka #Colombo #Jaffna
PriyaRam
7 months ago
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் -  கொழும்பு உயர் நீதிமன்று முன்பாக மாபெரும் போராட்டத்திற்கு தீர்மானம்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

 முல்லைத்திவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ரி.சரவணராஜா தன்னுடைய கடமை நிமித்தம் ஆற்றிய சேவைக்காக அல்லது ஆற்றிய பணிக்காக அதிகார வர்க்கத்தினாலே அச்சுறுத்தப்பட்டு இன்று நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு அவர் உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். 

 இந்த சம்பவம் மிக வேதனையானது மாத்திரமல்ல இலங்கையில் இருக்கக்கூடிய அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு துயரமான, நீதித்துறை வரலாற்றிலேயே காறை படிந்த கருப்பு சம்பவமாக நாங்கள் இதனை பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

 இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற விதமாக நேற்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கக்கூடிய அனைத்து சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தோம்.

 வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு முன்பாக கூடி கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றை அங்கு நடத்தி இருந்தோம் எனத் தெரிவித்தார்.

 நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் கூடிய சட்டத்தரணிகள் ஒரு தீர்மானம் ஒன்று எடுத்து இருக்கின்றோம் அதில் பிரதானமாக இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டலாம் ஒன்று வடக்கு கிழக்கு எங்கும் எங்களுக்கென்று ஒரு சட்டத்தரணி சங்கத்தை உருவாக்குவது தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம், இரண்டாவது எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்த சம்பவத்துக்கு எதிராக கண்டனத்தை வெளியிடும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்து இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

 அதிலே இலங்கையினுடைய தாய் சட்டத்தரணிகள் சங்கமும், அனைத்து பிராந்திய சட்டத்தரணிகள் சங்கமும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு தொடர்பில் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 இந்த போராட்டம் இலங்கை முழுவதும் மட்டுமல்ல உலகத்தினுடைய கவனத்தையும் ஈர்ப்பதற்காக கொழும்பிலே வடக்கு மாகாண சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக அமையும் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.