தென்கொரியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள் : இந்த வருடத்தில் 5000 பேர் சென்றுள்ளனர்!

இந்த வருடத்தில் இதுவரை தென் கொரியாவுக்குப் தொழிலுக்காக சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 44 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் நாட்டின் அர்ப்பணிப்பை இந்த எண்ணிக்கை காட்டுவதாக தெரிவித்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையை தளமாகக் கொண்ட தென் கொரிய மனித வளத் திணைக்களத்தின் பணிப்பாளர், இந்த ஆண்டு தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு 8,000 வேலை வாய்ப்புகளை வழங்க ஒப்புக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது முன்னர் வழங்கப்பட்ட 6,500 வேலை ஒதுக்கீட்டை விட அதிகமாகும் என்றும் இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



