எதிர்காலத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகளும் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கும் - ரணில்!

இலங்கை தற்போதைய பொருளாதார சவாலில் இருந்து விடுபட்டு போட்டிப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டுமாயின், அதற்கு நாட்டின் மனித வளத்தை திரட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சவால்களை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பதை பட்டதாரிகள் மற்றும் புத்திசாலித்தனமான மனித வளங்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஐந்து வருடங்களில் உலகில் பல மாற்றங்கள் நிகழலாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட எதிர்காலத்தில் பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அடுத்த வருடத்திற்குள் நாட்டில் நல்லதொரு பொருளாதார நிலைமையை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



