கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய குழுக் கூட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று(04) புதன்கிழமை காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது கிளிநொச்சி மாவட்ட விவசாய பிரிவின் செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள், விவசாயம் காப்புறுதி சார் செயற்பாடுகள், மாகாண விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி திணைக்கள செயற்பாடுகள், விதை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்புச் செலுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், மேய்ச்சல் நிலம் உள்ளிட்ட ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரி, மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

