நீதிபதி ஒருவர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறுவது சாதாரணமான விடயமல்ல - லக்ஷ்மன் கிரியெல்ல!

பாராளுமன்றமே நாட்டின் நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகித்து வருவதாகவும், அதனால் சட்டத்தின் சுயாதீனத்தை பாதுகாக்காதவரை முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரப்போவதில்லை என்றும் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03.10) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சடத்திருத்தம் குறித்த விவாத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி இருக்கிறார். நீதிபதிகள் இவ்வாறு பதவி விலகும் நடவடிக்கைகள் இடம்பெறுவது சாதாரணமாகும். ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு நீதிபதி ஒருவர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவையாகும். இது பாரதூரமான விடயமாகும். அத்துடன் நீதிமன்றத்துக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பது பாராளுமன்றமாகும்.
நீதிமன்ற சுயாதீனத்தன்மை பாதிக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபாேது, அதுதொடர்பாக நீதிமன்றம் எந்த தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது என இந்த பாராளுமன்றமே உத்தரவிட்டது.
அதேபோன்று முன்னாள் பிரதம நீதி அரசர் சிராணி பண்டாரநாயக்க திவுனெகும திட்டத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்காததால் அவருக்கு எதிராக பாராமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து நீக்கி இருந்தது. அதேபோல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அரசாங்கம் தேர்தலை நடத்த பணம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்தது.
அத்துடன் தேர்தலை பிற்போட்டமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்பட்டு 8மாதங்கள் ஆகியும் இன்னும் அதுதொடர்பான விசாரணை முடிவுக்கு வராமல் இருக்கிறது. சட்டத்தின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு விசாரணை 2மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும். எனினும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.



