நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும் சுயாதீனமற்ற அரச இயந்திரமும் - பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும் சுயாதீனமற்ற அரச இயந்திரமும் - பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்தியும், தற்போதைய நிலையை விவரித்தும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், “யாருக்கும் அடிபணியாமல் நீதி வழுவாது தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராசா அவர்கள் அரசியல் அழுத்தங்களாலும் உயிர் அச்சுறுத்தல் காரணமாகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விரக்தியினால் பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி உள்ளமை அனைவர் மத்தியிலும் அதிர்வலைகளை உள்ளாக்கியுள்ளது. 

இந் நிகழ்வு இலங்கை நாட்டின் நீதிப் பொறிமுறையின் சுயாதீனத் தன்மை அற்ற நிலையை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இது போன்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குருபரன் அவர்களும் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னிலையானதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டு வழக்கிலிருந்து விலக நெருக்கடி கொடுக்க, அவரோ விரிவுரையாளர் பதவியினை துறந்திருந்தார் என்பதனை நினைவுபடுத்தவும், நாட்டின் இன்றைய நிலைக்கும், இனப்பிரச்சனைக்கும் சுயாதீனமற்ற நீதித்துறையும் ஒரு காரணமாகும் என்பதனை சுட்டிக்காட்டவும் நாம் விரும்புகின்றோம்.  

நீதித்துறையைச் சார்ந்த கௌரவ நீதிபதி சரவணராசா மட்டுமல்ல இலங்கை அரச இயந்திரத்தின் சகல துறைகளும் அரசினதும் பேரினவாத சக்திகளினதும் அரசியல் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றமை என்பது ஒரு புதிய விடயமல்ல. காலா காலமாக நடைபெறுகின்ற ஒரு விடயமே. 

இதனால் தான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், இறுதி யுத்தம் உள்ளிட்ட பல சம்பவங்களிற்கு உள்ளக விசாரணையை மறுத்து சர்வதேச விசாரணையை பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கோருகின்றன. இலங்கை நாடும், நாட்டின் மக்களும் இன்று எதிர்கொள்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடிகளின் மத்தியிலும் அரசும், பேரினவாத சக்திகளும் எவ்வித மாற்றமும் இன்றி முன்னரை விட மோசமாக செயற்படுவது நாட்டினை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும்.

அத்துடன் அரசு தனது கையறு நிலையை மறைப்பதற்கும், அப்பாவி மக்களின் கவனங்களைத் திசை திருப்புவதற்குமே இவ்வாறான உணர்ச்சிகரமான, இன முறுகல் நிலைகளினை ஊக்குவிப்பதோடு, அவற்றிற்குத் துணையும் போகின்றது என்பதனை இனம், மதம் என சகல வேறுபாடுகளையும் கடந்து அனைத்து மக்களும் புரிந்துகொண்டு செயலாற்றினால் தான் இலங்கை என்ற எமது நாடு மீட்சியடையும். 

எனவே இலங்கை மற்றும் சர்வதேச முற்போக்கு சக்திகள் இணைந்து இந்நிலையைச் சீர் செய்ய, நீதித்துறை உள்ளிட்ட அரச இயந்திம் அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!