ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவான பணத்தை வைப்பிலிட்டுள்ள முதியர்கள் வட்டியை பெறலாம்!

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகையை வைத்துள்ள மூத்த பிரஜைகளின் வட்டியை நிறுத்தி வைப்பதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வைப்புத் தொகையை வைத்துள்ள முதியோர்களுக்கு தக்க வைப்புத் திட்டத்தினால் ஏற்படும் அநீதிக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வன்வெல்ல பிரதேசத்தில் இன்று (27.09) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இப்பிரச்சினைகளை விசாரிப்பதற்காக 1944 என்ற புதிய தொலைபேசி இலக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான வைப்புத்தொகை உள்ள மூத்த குடிமக்கள், ஓராண்டு கழிந்த பின்னரே, தங்கள் வைப்புத்தொகைக்கு வட்டி பெற முடியும் என்க கூறிய அவர், நேற்றைய தினம் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், ஓராண்டு நிறைவடையாத போதிலும், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான தொகையை வைப்பிலிட்டுள்ள முதியோர்கள் தமது வட்டிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரிப்பதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



