காலி துப்பாக்கிச் சூட்டில் அமைச்சர் ஒருவரின் உறவினர் மரணம்

இனந்தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச் சூட்டில் இராஜாங்க அமைச்சர் டி.டி.சானக்கவின் மாமனார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான துப்பாக்கிச் சூடு நேற்று இரவு காலி, லோயர் டிக்சன் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துணி விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் அம்புலன்ஸ் வண்டியில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகர் காலி, வூட்வார்ட் மாவத்தையில் வசிக்கும் 61 வயதுடையவர் ஆவார்.
காரில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸ் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.



