ஜனாதிபதி ரணில் - நிக் கிளெக்கிற்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நியூயோர்க்கில் உள்ள மெட்டா கம்பனியின் குளோபல் ரிலேஷன்ஸ் தலைவர் நிக் கிளெக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (19) மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றக் குழு மீளாய்வின் போது இந்த சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைச் செய்ய முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையின் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலங்கை அரசாங்கத்திற்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான பங்காளித்துவத்திற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இலங்கைப் பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்கும் மெட்டா நிறுவனத்துடன் ஒத்துழைப்புத் திட்டத்தை நிறுவுவதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான தரவு அடிப்படையிலான திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்ற அதேவேளை, கல்வியில் விசேட கவனம் செலுத்தி இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அபிவிருத்தியை மேம்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி நிக் கிளெக்குடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



