ஏப்ரல் 21 தாக்குதலுக்கு விசாரணைக் குழுக்களை நியமிப்பதில் அர்த்தமில்லை!

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நீதி வழங்கப்படாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கலமுல்லை புனித மரியாள் தேவாலயத்தின் 125வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுக்கு விசாரணைக் குழுக்களை நியமிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள மூவர் கொண்ட குழுவை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் நிராகரித்துள்ளது.
நாங்கள் சிஐடியின் விசாரணைகளையே கோருகின்றோம், இந்த விசாரணைகள் வெளிப்படைத்தன்மை பக்கச்சார்பின்மை போன்ற விடயங்களை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஏதாவதொரு கண்காணிப்பு அவசியம் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் பெர்ணாண்டோ சண்டே டைம்ஸ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளை இடம்மாற்றப்பட்ட 20 சிஐடி ஆய்வாளர்களிடம் விசாரணைகளை ஒப்படைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல ஆணைக்குழுக்கள் , விசாரணை குழுக்கள் உள்ள போதிலும் ,அரசியல் தலையீடுகள் அவற்றை பாதித்துள்ளன,என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில் பெர்ணாண்டோ எங்களிற்கு இந்த ஆணைக்குழு குறித்து திருப்தியில்லை. உண்மை வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது, முழு உலகிற்கும் இது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.



