கொழும்பு- மாளிகாகந்தேயில் 6 வயது பெண் குழந்தை சுட்டுக்கொலை

கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தந்தையை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் கடந்த வருடம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற குற்றச் சம்பவமொன்றின் பிரதான சந்தேகநபர் ஆவார்.
இன்று மாலை 3.30 மணி முதல் 4.00 மணி வரை துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நபரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஆவார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தையும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆண் நபரும் அவரது 6 வயது பெண் குழந்தையும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பல புலனாய்வுக் குழுக்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.



