மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம்!

இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (16.09) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை இரவு 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை செப்டம்பர் 27ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் சனிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



