சசித்ர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

விளையாட்டு போட்டிகளை பணத்திற்காக ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நிராகரித்துள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று (15ஆம் திகதி) உத்தரவிட்டார்.
சிறைச்சாலையில் உள்ள சந்தேகநபரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு பிரதம பரிசோதகர் விதானகேவை எதிர்வரும் 19ஆம் திகதி அனுமதிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரின் நடவடிக்கைகளின்படி, அவர் அனுபவம் வாய்ந்த குற்றவாளியை விட அதிநவீனமான நபர் எனத் தோன்றுவதாகவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.
மொரிசியஸ் தீவில் படகு சவாரி செய்யும் போது கையடக்கத் தொலைபேசி நீரில் விழுந்ததாக தாம் கூறிய கருத்து முற்றிலும் புனையப்பட்ட கதை எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேக நபர் 10-15 பிரபல கிரிக்கட் வீரர்களுடன் கிளப்களில் நடத்தப்படும் விருந்துகளுக்கு மாதம் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் சென்றுள்ளதாகவும் அவர்களுக்கான அனைத்து செலவுகளையும் தாராளமாக ஏற்றுக்கொண்டதாகவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.
சந்தேகநபர் விசாரணைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையிலும் தலையிடவில்லை எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ சுட்டிக்காட்டியதோடு, சந்தேகநபரை எந்த நிபந்தனையின் கீழும் பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
சந்தேகநபர் குரல் மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி சட்ட வைத்தியத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், சில தொழிநுட்பக் கோளாறு காரணமாக, பின்னர் அவரை முன்னிலைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.



