கண்டியில் நடத்தப்பட்ட மாதிரி தேர்தல் : பெரும்பாலான மக்களின் நிலைப்பாடு என்ன?

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து சர்வதேச ஜனநாயக தினத்தை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி தேர்தல் இன்று (16.09) கண்டி நகர மத்திய வர்த்தக சந்தை கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.
Caffe அமைப்பு, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் ( CMEV), VIEW ஆகிய தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் பிரதானிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இம்மாதிரி தேர்தலில் கண்டி மாவட்ட மக்களுக்கு தேர்தல் தொடர்பான அபிப்பிராயங்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
742 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்ததுடன் 92.59 சதவீதமானோர், விரைவாக தேர்தலொன்று அவசியம் என தெரிவித்துள்ளதுடன் அதில் 26.54 சதவீதமானோர் ஜனாதிபதி தேர்தல் அவசியம் எனவும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளின் படி 9.41சதவீதமானோர் தேர்தல் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் கே. அர்ஜூன, தேர்தல் தொடர்பில் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிக்கொணர்ந்ததுடன் தேர்தல் வேண்டாம் என குறிப்பிடும் ஒரு சிலர் வேண்டாம் என குறிப்பிடுவதற்கான காரணம் தேர்தல் தொடர்பான வெறுப்பன்றி, ஊழல்வாய்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான வெறுப்பையே புலப்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் Caffe அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் பிரதானி டி. எம். திசாநாயக்க ஆகியோர் விரைவில் தேர்தலொன்றை நடாத்துவதற்கான வாய்ப்பை விரைவாக உரிய பொறுப்புவாய்ந்த தரப்பினர் மேற்கொண்டு ஜனநாயகத்தினை பாதுகாக்க செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



