சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறுவர் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க, “ஜனவரி முதல் ஜுலை 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், 5,456 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறுவர்கள் பிச்சை எடுப்பது தொடர்பில் 196 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், குழந்தைகள் பிச்சை எடுப்பது தொடர்பான முறைப்பாடுகள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி சிறுவர்களை பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்துவது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இணையவெளியில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், சிறுமிகள் தொடர்பில் 76 முறைப்பாடுகளும், சிறுவர்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால், தயாரிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஐந்தாண்டு தேசிய திட்டம் ஒன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



